
ஹரிக்கேன் விளக்கு...
தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.
 பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.
பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும்  இந்த விளக்குகள் பயன்படும்.
இதற்க்கு  ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின்  போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து  அனைந்து போகாமல்   வெளிச்சத்தை கொடுக்க வல்லது. 
ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...
இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.
இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...
மின்சாரம்  எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை  சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம்  எடுதது  முந்தின நாள் இரவில் அந்த விளக்கு  உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும்.  அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.
   கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி
(  மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற  கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த  குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....
அப்போது  என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம்  சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல்  பக்கத்தில்  உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.
நம்ம  எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால்  ஒரு தடிப்பு  நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும்  அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது  போல்  அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.
இப்போதெல்லாம்  லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க  முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.
ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா  அட்டை புத்தகத்தில்
அனா  ஆவன்னா படித்தேன்,  தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி  ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க  முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து  இருந்தது, இன்றும் என் நினைவின்  ஈர அடுக்குகளில்.....
மழைகாலங்களில்  அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில்  மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின்  நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.
அதுதெரியும் போது  நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.
ஹரிக்கேன்  விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை  வாசமும்  அது சில நேரங்களில்  பக் என்று  பற்றிகொண்டதும் அலறி அடித்து  அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து  பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.
ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.
 என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன்  விளக்குகளாய் வீழ்ந்தும்,
 இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.
தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி....   
 
 
