Monday, 1 August 2011

ஐன்ஸ்டீன் பற்றி தெரியாத செய்தி!

 விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்  (1879-1955) பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. அவர் அறிவியல் அறிஞர் - அணுவின் ஆற்றலைக் கண்டு பிடித்தவர், ஒளிமின் விளைவைப்பற்றிக் கண்டு பிடித்ததற்காக நோபெல் பரிசு அளிக்கப்பட்டவர் என்றெல்லாம் பொதுவாக அறியப்படுகிறது.

அதே நேரத்தில் கடவுள் பற்றி மதம் பற்றி அந்த அறிவியல் அறிஞன் என்ன சொன்னான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

மதம், கடவுள் பற்றி அய்ன்ஸ்டீன் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்று எத்தனை ஏடுகள் எடுத்து இயம்புகின்றன?

அவர் ஆன்மிகவாதியாக இருந்திருந்தால், அவர்தம் கண்டுபிடிப்புகளை விட, அவரின் ஆன் மிகச் சிந்தனைகளை; அடேயப்பா, ஆகாயம் வரை கொண்டு சென்று இருப்பார்களே!

2008 அக்டோபர் 12 ஆம் தேதி இந்து ஏட்டில்  ஒரு தகவல் வெளிவந்தது.

உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கடிதங்கள் ஏலத்திற்கு வந்தன. அவற்றுள் ஒரு கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது.

மத நம்பிக்கைகள் சிறுபிள்ளைகளின் மூட நம்பிக்கைகள்; மனித இனத்தின் பலவீனத்தால் உருவானவை என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை (Biologist)  ரிச்சர்டு டாகின்ஸ் ஏலம் எடுக்க முனைந்தார்; முடியவில்லை. 1,70,000 பவுண்டுக்கு ஏலம் போனது என்ற தகவலை தி இந்து ஏடு வெளியிட்டு இருந்தது.

நோபெல் பரிசு பெற்ற பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுள் மறுப்பாளர் களாகவும், மதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

அய்ன்ஸ்டீன் ஒரு தலை சிறந்த விஞ்ஞானி என்றா லும் அவர் யூதர் வகுப்பில் பிறந்ததால் ஹிட்லரின் வெறுப்புக்கு ஆளானவர். ஜெர்மனியை விட்டு அமெ ரிக்கக் குடிமகன் ஆனவர்.

மனித மூளையின் ஆற்றலை அதிகப்படியாகப் பயன்படுத்தியவர் அய்ன்ஸ்டீன் என்று கூறப்படுகிறது.

இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவ லாகும். இன்று அவரது நினைவு நாள் (1955).

- மயிலாடன்
நன்றி:விடுதலை (18 ஏப்ரல் 2011)

No comments:

Post a Comment